இளையராஜாவுக்கு கேரளா அரசின் நிசாகந்தி விருது வழங்கி சிறப்பிப்பு!!
திருவனந்தபுரம்: இசைஞானி இளையராஜாவுக்கு கேரளா அரசின் நிசாகந்தி விருதை அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி வழங்கி சிறப்பித்தார்.
கேரளாவின் சுற்றுலா துறை சார்பில் திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்கியது. இவ்விழா வரும் 27-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கேரளா அரசின் "நிசாகந்தி" சாதனையாளர் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் உம்மன்சாண்டி வழங்கினார்.
இளையராஜா சங்கீத அகாடமி
அப்போது பேசிய உம்மன்சாண்டி, இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளா பெருமைகொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
இதில் பேசிய இளையராஜா, நான் தொடங்கும் சங்கீத அகாடமி மூலம் பல இளையராஜாக்களை கேரளாவில் உருவாக்க முடியும் என்றார்.