"முன்னேற்றத்தை நோக்கி"...பீகார் சட்டசபை தேர்தலுக்கான நிதிஷின் புதிய ஹை டெக் பிரசாரம்!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் பிரசார யுக்திகளை செயல்படுத்த தொடங்கிவிட்டார். முதல் கட்டமாக 'பீகார் முன்னேற்றத்தை நோக்கி' என்ற ஹை டெக் பிரசார திட்டத்தை இன்று அவர் தொடங்கியுள்ளார்.
பீகார் சட்டசபைக்கு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இந்த அணியில் காங்கிரஸும் இணைய உள்ளது.
இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமது தேர்தல் பிரசாரத் திட்டங்களை நிதிஷ் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.
இதன் முதல் கட்டமாக 'பீகார் முன்னேற்றத்தை நோக்கி" என்ற பிரசாரத்தை நிதிஷ் தொடங்கி உள்ளார். இந்த திட்டத்தில் ஐஐடி, ஐஐஎம் பட்டதாரிகள், பிரசாந்த் கிஷோர் தலைமையில் இணைந்து நிதிஷின் வெற்றிக்காக பாடுபட உள்ளனர்.
அத்துடன் 400 டிரக் வாகனங்களில் டிவி, ஒலிஒளிபரப்பு சாதனங்கள், மைக்ரோபோன்கள், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு கிராமங்களில் இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இப்பிரசார பயணத்தை இன்று தொடங்கி வைத்த நிதிஷ், 7 வாரங்களில் 40 ஆயிரம் கிராமங்களை சென்றடைய இருக்கிறோம்; மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அந்த மக்களிடம் கருத்து கேட்க இருக்கிறோம். இதனடிப்படையில் விஷன் 2025 உருவாக்கப்படும்.
பீகாரில் மின்வெட்டு நீண்டகாலம் இருந்தது. தற்போது இந்த மின்வெட்டை முற்றாக நீக்கியுள்ளோம். இதேபோல் பெண்குழந்தைகள் கல்வி கற்க முடியாத அளவுக்கு வறுமை இருந்தது. தற்போது இலவச சைக்கிள் வழங்கி அவர்களை படிக்க வைத்துள்ளோம். இத்தகைய திட்டங்களை தொடர்ந்தும் நாங்கள் செயல்படுத்துவோம் என்றார்.