காவிரி விவகாரம்.. மோடியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை - சித்தராமையா !
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருவதாகவும், ஆனால் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கர்நாடக அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை முடிவு செய்தது. சிறப்பு சட்டசபையை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவரிடம் சித்தராமையா வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், காவேரி விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியை சந்திக்க தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருவதாகவும், ஆனால் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனையடுத்து கர்நாடக மேலிடப் பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக்விஜய்சிங்கை சித்தராமையா சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications