பாமகவுடன் சமரசம் கிடையாது.. திமுக கூட்டணியில் இடம் பெற்றால் வெளியேறுவோம்: திருமாவளவன் திட்டவட்டம்
புதுச்சேரி: பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவை இடம் பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒருபோதும் இடம் பெறாது; இதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றியும் எந்த ஒரு கவலையுமே இல்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக, பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. அண்மையில் பாமகவின் மாமல்லபுரம் சித்திரைப் பெருவிழாவுக்கு திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு வழங்கப்பட்டது. இதனால் விசிகவுடன் பாமக சமரசமாக போவதற்கு முயற்சிப்பதாக கூறப்பட்டது.

மேலும், பாஜகவுடனான கூட்டணியை விரும்பாத டாக்டர் ராமதாஸ், திமுக கூட்டணிப் பக்கம்தான் போக விரும்புகிறார். இதற்கு முன்னோட்டமாகவே திமுக கூட்டணியில் தங்களை கடுமையாக எதிர்க்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் சமரசமாக போகும் முயற்சிகளை மேற்கொள்கிறது; பாமகவின் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து பாமகவும் திமுக கூட்டணியில் இடம் பெறலாம் என கூறப்பட்டது.
இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின், திமுக-பாமக கூட்டணி வதந்திதான் எனவும் கூறியிருந்தார். இருப்பினும் விசிகவைத் தக்க வைக்கவே முதல்வர் ஸ்டாலின் அப்படி கூறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன், பாமக மற்றும் பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக ஒரு போதும் இடம் பெறாது; இதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றியும் எந்த ஒரு கவலையுமே இல்லை என கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, திமுகவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியான கருத்துகளையும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். தற்போது பாமக இடம் பெறும் அணியில் ஒரு போதும் விசிக இடம் பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியிருப்பதன் மூலம், பாமக உள்ளே வந்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்பதுதான் நிலைப்பாடு என தெளிவுபடுத்தி இருக்கிறார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications