தொடர் ரெய்டால் அதிருப்தி.. பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
தொடர் வருமான வரி சோதனை காரணமாக மத்திய பாஜக அரசு மீது தமிழக அதிமுக அரசு அதிருப்தியில் இருக்கிறது.
டெல்லி: தொடர் வருமான வரி சோதனை காரணமாக மத்திய பாஜக அரசு மீது தமிழக அதிமுக அரசு அதிருப்தியில் இருக்கிறது. இதனால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக இன்று லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாஜகவிற்கு எதிராக லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ரெய்டால் கோபம்
இதில் பாஜக மீது அதிமுகவிற்கு இரண்டு விதமான கோபம் இருக்கிறது. சென்னை வந்த அமித்ஷா தமிழகத்தில் அதிக ஊழலான ஆட்சி நடக்கிறது என்று கூறினார். இது அதிமுகவிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்து வரிசையாக தமிழகத்தில் மீண்டும் ரெய்டு காலம் தொடங்கி இருக்கிறது. தொடர் வருமான வரிசோதனையால் அதிமுக பெரிய கோபத்தில் இருக்கிறது.
நெருக்கமானவர்கள்
அதேபோல் இந்த வருமான வரிசோதனை அதிமுகவின் முக்கிய புள்ளிகளை பெரிய அளவில் குறி வைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்கள் அதிக அளவில் குறிவைக்கப்பட்டார்கள். கிறிஸ்டி நிறுவனம், எஸ்பிகே நிறுவனம் என்று எல்லாமே முதல்வருக்கு நெருக்கமான நபர்கள்.இதனால் ஆளும் அதிமுக, மத்திய அரசு மீது கோபத்தில் இருக்கிறது.
ஆனால் என்ன
ஆனாலும், பாஜகவிற்கு எதிராக அதிமுக ஓட்டளிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. தமிழக பாஜகவினர், அதிமுகவிற்கு ஆதரவாக இருப்பதால், மத்தியிலும் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க அதிமுக முடிவெடுத்து இருக்கிறது. ஆனால் இந்த ரெய்டு பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவை மாற்றி, 37எம்.பிக்களும் வேறு மாதிரி வாக்களிக்கவும் வாய்ப்புள்ளது.
என்ன நடக்கும்
அதிகபட்சம், பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றாலும், அதிமுக, பாஜகவிற்கு எதிராக வாக்களிக்காது என்றே கூறப்படுகிறது. இதனால் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளியேறும். இதனால் பாஜகவிற்கு எந்த விதமான நன்மையும் ஏற்பட போவதில்லை. அதேபோல் எந்த விதமான பிரச்சனையும் ஏற்பட போவதில்லை.