இந்தியாவில் 'எபோலா' இல்லை, பீதி அடைய வேண்டாம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
டெல்லி: இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்குதல் இல்லை. அதனால் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் நூற்றுக் கணக்கோரின் உயிரை குடித்த எபோலா வைரஸை நினைத்து உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் கானாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவருக்கு எபோலா தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த டெல்லிக்காரர் மற்றும் அவரது குடும்பத்தார் 2 பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய மக்களிடையே எபோலா பற்றிய பீதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில்,
இன்று, இந்த நிமிடம் வரை இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்குதல் இல்லை. அதனால் யாரும் பீதி அடைய வேண்டாம். எபோலா பரவாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
எபோலா வைரஸ் வேகமாக பரவும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 45 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் நாடு திரும்பினால் வைரஸ் இந்தியாவுக்குள் வரலாம் என்ற அச்சம் உள்ளது.