முத்த போராட்டம்: கைது செய்தும் போலீஸ் வேனில் லிப் டூ லிப் கொடுத்த ஜோடி
கொச்சி: கொச்சியில் முத்த போராட்டம் நடத்தியவர்களில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள காபி கடை ஒன்றில் ஆண்களும், பெண்களும் கூடி அநாகரீகமாக நடந்து கொள்வதாகக் கூறி பாஜக இளைஞர் அணியினர் அந்த கடையை கடந்த வாரம் தாக்கி சேதப்படுத்தினர். இதை கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சி மரைன் டிரைவில் ஞாயிற்றுக்கிழமை மாலை காதல் முத்தம் என்ற முத்தமிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வோர் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் கூடி அதன் பிறகு கொச்சி மரைன் டிரைவ் மைதானத்திற்கு செல்வதாக அறிவிக்கப்பட்து. இந்த போராட்டத்திற்கு பஜ்ரங் தளம், முஸ்லிம் அமைப்பு மற்றும் கேரள மாணவர்கள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணி நடத்தின. முத்த போராட்டத்தில் சிலர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று நினைக்கையில் ஆயிரக்கணக்கானோர் சட்டக்கல்லூரியில் கூடிவிட்டனர்.
அவர்கள் கல்லூரியில் இருந்து மரைன் டிரைவ் மைதானத்திற்கு கிளம்பினர். மைதானத்தில் தான் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் மைதானத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களில் 50 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
போலீஸ் வாகனத்தில் ஏற்றியும் அதற்குள் அமர்ந்து ஒரு ஜோடி லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது.
இது குறித்து மரைன் டிரைவ் மைதானத்திற்கு வந்த பல வாலிபர்கள் கூறுகையில், இந்த போராட்டம் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது, வெட்கக் கேடானது. என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஆர்வத்தில் தான் வந்தோம் என்றனர்.