அந்தமான் படகில் பாதுகாப்பு கவசம் இல்லாததே உயிரிழக்க காரணம்: 3 பேர் கைது
போர்ட்ஃப்ளேர்: அந்தமானில் நடந்த படகு விபத்தில் 28 பேர் உயிரிழக்கக் காரணம் படகில் தேவையான அளவு கவச உடைகள் இல்லாததே காரணம் என்பது தெரியவந்துள்ளது. அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால்தான் விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து விபத்துக்கு காரணமான படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தமானில் நேற்று இரவு நடந்த படகு விபத்தில் 21 பேர் பலியானார்கள். 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சீபுரத்தில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்றபோது சுற்றுலா ஏற்பட்டாளர் கே.செல்வராஜ் தன்னுடன் தன் குடும்பத்தினரையும் அழைத்து சென்றிருந்தார்.

அவர் மகன் மணிகண்டன், மருமகள் உஷா, பேத்தி பூஜா ஆகியோரும் செல்வராஜுடன் சென்றிருந்தனர். படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட போது செல்வராஜ் தன் குடும்பத்தினரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரது கண் எதிரில் அவர் குடும்பத்தினர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறுமி மீட்பு
அவரது மகன் மணிகண்டன், மருமகள் உஷா தண்ணீருக்குள் மூழ்கிப் போனார்கள். தண்ணீரில் தத்தளித்த செல்வராஜை சிலர் மீட்டனர்.அவரது பேத்தி பூஜா படகு கொக்கியில் சிக்கிக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மகன், மருமகளை பறி கொடுத்த செல்வராஜ் படுகாயங்களுடன் போர்ட் பிளேயரில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுமி மீட்பு
செல்வராஜ் மகன், மருமகள் பலியானதை அறிந்ததும் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் தப்பிய பூஜா என்ன ஆனாள் எங்கு இருக்கிறாள் என்பது தெரியாமல் தவித்தனர்.
அதன் பிறகு சுற்றுலா சென்றவர்களில் ஒருவரான கஜேந்திரனை தொடர்பு கொண்டபோது அவர் தான் மணிகண்டன், உஷா இறந்து போனதை உறுதிப்படுத்தினார்.
பூஜாவை மீட்டு விட்டதாக கூறினார். பூஜாவை தன்னுடன் பத்திரமாக வைத்து இருப்பதாகவும், இன்றே சென்னைக்கு அழைத்து வருவதாக எங்களிடம் கூறியதாக உஷாவின் உறவினர் கூறினார்.
மூவர் கைது
அந்தமானில் படகு கவிழ்ந்து, 28 பேர் பலியான சம்பவத்தில், படகு உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை அந்தமான் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்தமான் டிஜி.பி., சுதிர்யாதவ் கூறுகையில், 'ஒரே படகில், 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி உள்ளனர். இதுவே, விபத்திற்கு காரணம். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் போஸ்ட்மார்ட்டத்திற்கு பின்னர், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
பிரேத பரிசோதனை வேண்டாம்
இதனிடையே அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அனுப்ப வேண்டும் என்று காஞ்சிபுரம் எம்.பி விஸ்வநாதன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
அந்தமான் அருகே போர்ட் பிளேரில், நிகழ்ந்த படகு விபத்தில் பலியான 21 பேரில், 16 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யபடாமல் தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று, இவர்களுடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், பிரதமரை நேரில் சந்தித்து எம்.பி விஸ்வநாதன் தமிழகர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அனுப்ப வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளார்.
கவச உடைகள் இல்லை
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள, அமைச்சர் நாராயணசாமி, அந்தமானில் படகு மூழ்கி சுற்றுலாப் பயணிகள் இறந்த சம்பவம் மிகவும் சோகமானது; துரதிர்ஷ்டவசமானது என்றார். படகில் சென்றவர்களுக்கு உயிர்காக்கும் கவச உடைகள் (லைப் ஜாக்கெட்) மற்றும் பயணிகளை மீட்பதற்கான நீர்மூழ்கி வீரர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று தகவல் வந்துள்ளது. படகில் பாதுகாவலர்களும் இல்லை. இதுகுறித்த முழுமையான விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இரண்டு மணிநேர போரட்டம்
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, "படகு மூழ்குவதற்கு முன் வெடிக்கும் சத்தம் கேட்டது. அருகில் மீன்பிடித்துக் கொண்டிந்தவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், மீட்புக் குழுவினரோ, இரண்டு மணி நேரம் கழித்துதான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications