சசி, இளவரசிக்கு வருமானம் இல்லை- ஜெ.வுடன் பணபரிவர்த்தனை நடந்தது என்பது தவறு- வக்கீல் நாகேஸ்வரராவ்
டெல்லி: சசிகலா, இளவரசி ஆகியோருக்கு தனிப்பட்ட எந்த ஒரு வருமானமும் இல்லை; ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் இருந்ததாலேயே மூவருக்கும் இடையே பணப்பரிமாற்றம் நடந்தது என்பது தவறு என மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் உச்சநீதிமன்றத்தில் தமது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான அப்பீல் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் முன்வைத்த வாதங்கள்:
ஜெயலலிதா மீது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சொத்து குவிப்பு வழக்கே போடப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே முறைப்படியான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. நமது எம்ஜிஆர் நாளிதழின் வருமான வரி கணக்குமட்டும்தான் குற்றப்பத்திரிகை தாக்கலின் போது தாக்கல் செய்யப்படவில்லை.
வருமான வரி தீர்ப்பாயமே முறையற்ற சொத்து ஏதும் குவிக்கப்படவில்லை என கூறிவிட்டது. ஆனால் இதை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவே இல்லை. இந்த வழக்கு முழுவதுமே ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும்.
சசிகலா, இளவரசி இருவரும் ஜெயலலிதா வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு வருமானம் என்று எதுவும் இல்லை. ஆனால் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காகவே மூவருக்கும் இடையே பணப்பரிமாற்றம் நடந்தது என கூறுவது தவறானது.
ஜெயலலிதாவின் சொத்துகள் மிகையாக மதிப்பிடப்பட்டுள்ளன. அவரது சொத்துகளுக்கு முறையான வருமான வரி காட்டப்பட்டுள்ளது. மற்றவர்கள் சேர்த்த சொத்துகளுக்கு எல்லாம் ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும்?
சொத்து குவிப்பு வழக்குகளில் வருமான வரித்துறை ஆவணங்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
ஜெயலலிதாவின் சொத்துகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மிக அதிகமாக மதிப்பீடு செய்துள்ளனர்; ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ30 கோடி என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஆனால் அதுவும் கூட மொத்தம் ரூ67 லட்சம் என்பதுதான் சரியான மதிப்பு. இதற்கான பணத்தையும் கூட ஜெயலலிதாவின் சேமிப்பு பணத்தில் இருந்துதான் செலவிடப்பட்டது.
இவ்வாறு நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications