விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டண ரத்து நீட்டிப்பு!
டெல்லி: பணத் தட்டுப்பாடு காரணமாக விமான நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டண ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் ரூ.1000, 500 நோட்டுகள் ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு நாட்டில் மிகவும் அசாதாரண நிலை நிலவுகிறது. ரூ.100, ரூ.50 என குறைந்த மதிப்பிலான நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
வங்கிகளில் போதிய பணமில்லை. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருவதால், விமான நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒரு வார காலம் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டது.
இந்த நிலையில் ரத்து காலத்தை 28-ந் தேதி நள்ளிரவு வரை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மற்றும் தனியார் நிர்வகிக்கும் அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மால்களில்..
இதற்கிடையே, பணத்தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல வணிக வளாகங்களிலும் பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நாளை வரை நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை.