கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை; தமிழ்நாட்டில் தனித்து போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி: தமிழ்நாட்டில் இப்போதைக்கு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை, ஆதலால் தனித்து போட்டியிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்ட நிலையில் அமைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பெரும்பான்மையான தமிழக கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான முடிவை அறிவித்து விட்டன. சில கட்சிகளுக்கு மட்டுமே இழுபறி நிலையில் காணப்படுகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் இம்முறை காங்கிரஸ் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு முன்வரவில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த தி.மு.க., கடந்த ஆண்டு இறுதியில் கூட்டணியில் இருந்து விலகியது. காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்தித்தும், தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.

திமுக கூட்டணிக்கு வராத நிலையில் தேமுதிகவை தன் வசம் இழுக்கலாம் என கணக்குப் போட்டது காங்கிரஸ். ஆனால், தேமுதிக விசயத்தில் பாஜக முந்திக் கொண்டது. இந்நிலையில் இந்த லோக்சபா தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற குழப்பம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வெளிப்படையாகவே காணப்பட்டது.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேச்சிலும் கூட அது பிரதிபலித்தது.
இந்நிலையில், குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடப்போவதாக மறைமுகமாக காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், ‘தமிழ்நாட்டில் இப்போதைய நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications