மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
பில்பிட்: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தர பிரதேச மாநில நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி லோக்சபா தேர்தல் நேரத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பில்பிட் தொகுதியில் பாஜக தலைவர் வருண் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்பட்டது.

அப்போது மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா 144 தடை உத்தரவையும் மீறி தனது ஆதரவாளர்களுடன் பில்பிட் நீதிமன்றத்திற்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார். இதையடுத்து அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
நேற்றைய விசாரணையின்போதும் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மிஸ்ராவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட்டை பிறப்பித்து தலைமை மாஜிஸ்திரேட் அப்துல் கய்யூம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications