சீனத் தூதரை ராகுல்காந்தி சந்தித்தது உண்மைதான்... பல்டி அடித்த காங்கிரஸ்!
சீனத் தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்ததை மறுத்த அந்தக் கட்சி இப்போது அதனை உறுதி செய்துள்ளது.
டெல்லி : இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் சீன நாட்டுத் தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. பூடான் நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்கில் சீன ராணுவம் அந்தப் பகுதியில் சாலை அமைத்து வருவதால் சீனா இந்தியா இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது.
இதே போன்று மற்றொரு எல்லைப் பகுதியான சிக்கிமையும் ஆக்கிரமிப்பதற்காக சீனா குடைச்சல் கொடுத்து வருகிறது. சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் அங்கு ராணுவத்தை இந்தியா குவித்து உள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிக்கிம் மாநில எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவம்தான் தனது எல்லை பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாக தொடர்ந்து சீனா குற்றம்சாட்டி வருகிறது.
ராகுல்காந்தி கேள்வி?
இந்தியா படையை வாபஸ் பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
சீனத் தூதருடன் சந்திப்பு
இதனிடையே சீன தூதரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியாவிற்கான சீன தூதர் லூ சவோஹூய்யும் சந்தித்து பேசியதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் செய்தி வெளியான சிறிது நேரத்தில் தூதர பக்கத்தில் இருந்து இருவரின் சந்திப்பு குறித்த அறிவிப்பு அழிக்கப்பட்டது.
மறுத்த காங்கிரஸ்
இந்நிலையில் ராகுல்காந்தி சீனத் தூதரை சந்தித்ததாக சொல்வதில் உண்மையில்லை என்று அந்தக் கட்சி சார்பில் இன்று காலை மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித்சிங் சுர்ஜிவாலே சீனத் தூதரை ராகுல் காந்தி சந்தித்தது உண்மை தான் என்று கூறியுள்ளார்.
மரியாதை நிமித்த சந்திப்பு
சீனத் தூதர் மட்டுமின்றி, பூடான் நாட்டு தூதர், முன்னாள் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்டோரையும் ராகுல்காந்தி சந்தித்ததாக தற்போது காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகக்கூறியுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
பல்டி
காலையில் ஊடகங்களுக்கு அளித்த செய்தியில் சீனத் தூதரை ராகுல்காந்தி சந்தித்ததாக அவதூறு செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். அவர் பிற்பகலில் ராகுல்காந்தி சீனத்தூதரை சந்தித்தது உண்மைதான் என்று பல்ட்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.