”ஜாட்” வகுப்பினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கிடையாது- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஜாட் வகுப்பினருக்கு, வங்கிப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின்கீழ் ஒதுக்கீடு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜாட் வகுப்பினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஜாட் வகுப்பினரை இப்பட்டியலில் கொண்டு வந்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் ஜாட் வகுப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாட் வகுப்பினர் ஏராளமான விண்ணப்பதாரர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வங்கி அதிகாரிகள் முதல்நிலை பணிக்காக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை. எனவே இவர்களை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகய், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில், "இது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. விண்ணப்பதாரர்களில் யாருக்காவது பணி நியமனம் கடிதம் அளிக்கப்பட்டு இருந்தால் அதற்கும் இந்த உத்தரவு பொருந்தும்'' என்று குறிப்பிட்டனர்.