ஒடிஷாவில் மீண்டும் பயங்கரம்: சடலத்தை இரண்டாக உடைத்து தூக்கிச் சென்ற கொடுமைக்காரர்கள்!
பலசூர்: ஒடிஷாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சடலத்தை தூக்கிச் செல்ல வசதியாக அதன் இடுப்பு பகுதியில் மிதித்து இரண்டாக ஒடித்து மடித்து எடுத்துச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.
ஒடிஷாவில் மருத்துவமனை நிர்வாகம் வாகனத்திற்கு ஏற்பாடு செய்யாததால் தானா மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீட்டர் நடந்து சென்றார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு ஒடிஷாவில் மேலும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் பலசூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோரோ நகரை சேர்ந்த சாலாமணி பாரிக்(76) என்ற விதவை பெண் கடந்த புதன்கிழமை ரயில் மோதியதில் பலியானார். சோரோவில் மருத்துவமனை இல்லாததால் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலசூருக்கு ஆட்டோவில் உடலை எடுத்துச் சென்றால் செலவாகும் என பாரிக்கின் உடலை உள்ளூர் சுகாதார மைய ஊழியர்கள் தூக்கிச் சென்றனர். சுகாதார மைய ஊழியர் ஒருவர் பாரிக்கின் இடுப்பில் ஏறி நின்று உடலை இரண்டாக ஒடித்து மடித்தார். அதன் பிறகு இரண்டு ஊழியர்கள் சேர்ந்து பாரிக்கின் உடலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, துணியால் மூட்டை கட்டி இரண்டு கம்புகளில் தொங்கவிட்டு எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பாரிக்கின் மகன் ரபிந்திர பாரிக் செய்வது அறியாது கதறி அழுதார். இது குறித்து அறிந்த ஒடிஷா மாநில மனித உரிமை ஆணையம் போலீசார் மற்றும் பலசூர் மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.