பழைய பகை... சிறுநீர் குடிக்க வைத்து... செருப்பு மாலை... விசாரணைக்கு உத்தரவு!!
பத்ரக்: ஒடிஸாவில் பழிக்குப் பழி வாங்கும் விதமாக மொட்டை அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய பத்ரக் மாவட்ட கலெக்டர் ஞானரஞ்சன் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒடிஸாவில் பத்ரக் மாவட்டத்தில் பவுன்ஸ்பேக் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுக்காரர். திஹிடி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் ஒன்று கொடுத்து இருந்தார். அந்தப் புகாரில் தனது வீட்டுக்கு வந்த சிலர் தனது கணவரை இழுத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாகவும், பின்னர் மொட்டை அடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், வாங்கிய அடியை தாங்க முடியாமல், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் எனது கணவர். ஆனால், தண்ணீர் கொடுக்க மறுத்த அவர்களில் சிலர் அவர் மீது சிறுநீர் கழித்து குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், தன்னையும் அடித்து, தன்னிடம் இருந்த தங்க நகைகளை வாங்கிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவரிடம் பெற்ற புகாரின் கீழ் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவர்களுக்குள் நடந்த பழைய பகை காரணமாக இவ்வாறு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மாவட்டக் கலெக்டர் ஞானரஞ்சன் தாஸ் கொடுத்திருக்கும் பேட்டியில், ''இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு துணை கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications