ஒடிஷாவின் நியாம்கிரி மலையில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் தாக்கிய கொரோனா வைரஸ்!
ராயகடா: ஒடிஷாவின் நியாம்கிரி மலைகளில் வசிக்கும் டோங்கிரியா கோண்ட் எனப்படும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா அறிகுறிகள் உள்ளவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் திராவிடர் மரபின பழங்குடிகள் எளிதில் செல்ல முடியாத மலை முகடுகளில் கிராமம் கிராமங்களாக வாழ்ந்து வருகின்றனர். ராயகடா மாவட்டத்தின் நியாம்கிரி மலைகளில் டோங்கிரியா கோண்ட் எனப்படும் பழங்குடிகள் வசிக்கின்றனர்.

டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள்
இந்த மலைகளில் மொத்தம் 102 கிராமங்களில் 2,461 டோங்கிரியா கோண்ட் குடும்பத்தினர் வசிக்கின்றனர். டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் எண்ணிக்கை 9,597 என கணக்கிடப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்கள் இவர்கள். ராயகடா மாவட்டத்தின் பிஸ்ஸாம்கடாக், கல்யாண்சிங்பூர் மற்றும் முனிகுடா தாலுகாக்களில் இந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

சந்தைகளுக்கு பயணம்
பொதுவாக மலைகளை விட்டு வெளியேறாத இந்த மக்களிடத்தில் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒடிஷா அரசு வீடு வீடாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் ஒருசிலருக்கு கொரோனா லேசான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. மலைகளில் இருந்து தாங்கள் சேகரிக்கும் பொருட்களை சமவெளி சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதை இந்த பழங்குடிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல்
அப்படி சந்தைக்கு சென்றவர்களுக்குதான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது கொரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நியாம்கிரி மலைகளில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இந்த மலைகளில் இருந்து 45 கி.மீ. தொலைவில்தான் மருத்துவமனைகள் உள்ளன. ஆகையால் மலைப்பகுதிகளிலேயே கொரொனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது.

வேதாந்தா எதிர்ப்பு போராட்டம்
இந்த டோங்கிரியா கோண்ட் மக்கள்தான், ஸ்டெர்லைட் ஆலையை நடத்துகிற வேதாந்த குழுமத்தின் அலுமினிய தொழிற்சாலைக்காக நியாம்கிரி மலையில் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்கக் கூடாது என பல பத்தாண்டுகள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். இதனால் வேதாந்தா குழுமம் பெரும் பின்னடைவை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications