கோச் முழுவதும் ஆடியது.. சீட்டில் இருந்து விழுந்து விட்டோம்.. கோரமண்டல் ரயில் பயணி விவரித்த திக் திக்
கொல்கத்தா: சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்ட மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தின் போது என்ன நடைபெற்றது என்பது குறித்து ரயிலில் பயணித்த பயணி பகிர்ந்த அனுபவங்களை இங்கே பார்ப்போம்
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ரமேஷ் என்ற பயணியிடம் ஒன் இந்தியா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியது. விபத்து குறித்து பயணி ரமேஷ் கூறிய விவரம் வருமாறு:--

ரயில் தடம் புரண்ட போது வண்டி முழுவதும் ஆடியது. சீட்டில் இருந்த நாங்கள் கிழே விழுந்து விட்டோம். நாங்கள் இருந்த கோச் சாயவில்லை. ஆனால் வண்டி அப்படியே நின்று விட்டது. ஆனால் வெளியே வந்து பார்த்த போது பிற பெட்டிகள் எல்லாம் ஒன்றின் ஒன்று மோதி சேதம் ஆகி கிடந்தன. வெளியில் வந்த பிறகு இதை பார்த்தோம். நிறைய பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தார்கள்.
7.30 மணியளவில் மீட்புக்குழுவினர் வந்துவிட்டனர். பின்னால் வந்த பெட்டிகள் சேதம் அடையவில்லை. பாதுகாப்பாகத்தான் இருந்ததது. மாலை 7 மணியளவில் விபத்து நடந்ததால் இருள் சூழந்து விட்டது. இதனால் எத்தனை பெட்டிகள் என்று எண்ண முடியவில்லை. குறைந்தது 6 பெட்டிகளாவது விபத்தில் சிக்கி கிடந்து இருக்கலாம். விபத்து சேதம் மிகவும் மோசமாக இருந்தது.
உயிரிழப்பு எத்தனை என்று கணிக்க முடியவில்லை. ஆனால், அங்கு இருந்த நிலமையை பார்த்தால் நிறைய இருக்கும் என யூகிக்க முடிந்தது. ஒரு பெட்டி தனியாகவே கழன்று கிடந்தது. ஒன்றுக்கு மேல் ஒன்று ஏறி கவிழ்ந்து கிடந்தது. இதனால் ரயில் பெட்டிக்குள் கிடந்தவர்கள் இரண்டு மூன்று தலைகுப்புற விழுந்து அடிபட்டுள்ளனர். சிலர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் வண்டி கவிழ்ந்தததால் உள்ளே இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை.

சிலர் மற்றொரு புறம் மேலே ஏறி வந்தார்கள். 7.30 மணிக்கெல்லாம் ஆம்புலன்ஸ், போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. மேலே உள்ள வயர் கட் ஆகி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இல்லையென்றால் உயிரிழப்பு இன்னும் மோசமாக இருந்து இருக்கலாம். கோச்சை விட்டு இறங்கும் போது கரண்டில் பயணிகள் கால் வைத்து இருக்க நேரிடும். பெட்டிகள் கவிழ்ந்ததால் பக்கவாட்டில் இருந்த மின்சார போல்கள் சரிந்து விட்டன.
ஏசி பெட்டிகள்தான் பெரும்பாலானவை விபத்துக்குள்ளாகி கடந்தது. விபத்து நடைபெற்ற இடம் வனப்பகுதி என்று சொல்ல முடியாது. ஒரு கிராமத்தில் இருந்து அரை கி.மீட்டர் தொலைவில் விபத்து நடைபெற்றது. மீட்பு குழுவினர் உடனடியாக வந்து விட்டனர். ரயில்வே கிராசிங் பகுதியில் தான் இந்த விபத்து நடைபெற்றது. அதனால் அந்த பகுதி மக்கள் எல்லோரும் உடனடியாக வந்து விட்டனர். போலீசாரும் உடனடியாக மீட்பு பணிக்கு வந்துவிட்டனர். மிகப்பெரும் விபத்து. பார்க்கவே பரிதாபமாக உள்ளது.












Click it and Unblock the Notifications