காதலர் தினம்.. பறக்க மறுத்த ஏர் இந்தியா விமான பணிப் பெண்கள்
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் பொறுப்பின்மையால் நேற்று சிட்னி செல்ல வேண்டிய விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
வழக்கமாக விமானங்களில் சில நேரம் பயணிகள்தான் ஏதேனும் பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.இந்த முறை அதற்கு நேர்மாறாக அதன் ஊழியர்களால் விமானத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும்.

காதலர்தினத்திற்கு முதல் நாளான நேற்று ஏர் இந்தியாவின் ஒரு விமான பணிப்பெண் தனக்கு அளிக்கப்பட்ட டெல்லி-சிட்னி விமானத்தில் பணிக்கு செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் தன்னுடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பயண தூரம் குறைவாக உள்ள துபாய் போன்ற இடங்களுக்கு போகத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது சக ஊழியர்களான மேலும் இரண்டு பணிப்பெண்களும் அந்த விமானத்தில் செல்ல மறுத்துவிட்டனர். மற்றொருவரோ தாமதமாக வந்துள்ளார். இவர்களின் இந்த குழப்படியால், அவ்விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நான்கு பேரிடமும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு பணிப்பெண்கள் தங்களுடைய பயண தூரம் முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஒருவர் டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து கொண்டு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.அவரை மருத்துவரை அனுப்பி சோதித்த போது அவர் நன்றாக இருப்பது தெரிய வந்துள்ளது.ஆனாலும் சிட்னி விமானத்தில் செல்ல அவர் மறுத்ததால் அவரை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிக பணி நீக்கம் செய்துவிட்டது.
நான்காவது பணிப்பெண் தாமதமாக வந்து சிட்னி விமானத்தில் சென்று விட்டார். ஏர் இந்தியா தற்போது மற்ற இருவரின் பயண தூரத்தை கணக்கிட்டு வருகிறது.பயண தூரம் முடிவடையாமல் இருந்தால் அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதி நெருக்கடி, நஷ்டம், பணியாளர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல குழப்பங்களால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியா, தற்போது இப்படிப்பட்ட பிரச்சினைகளையும் பயணிகளுக்கு கொடுக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications