ரயிலில் தீ: குர்ஆனை எடுக்கச் சென்று உயிரிழந்த முதியவர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தீப்பிடித்த ரயிலில் பயணித்த ஒருவர் பத்திரமாக தப்பி வந்துவிட்டு பிறகு புனித நூலை எடுத்து வர திரும்பச் சென்றபோது பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ராவில் இருந்து டேராடூன் கிளம்பிய ரயில் தானேவில் சென்று கொண்டிருக்கையில் 3 பெட்டிகளில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியானவர்களில் குஜராத் மாநிலம் தஹோத்தைச் சேர்ந்த நசீர் அகமது கான் பதான்(50) என்பவரும் அடக்கம்.
பதான் மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவர் பயணித்த ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. ரயில் நின்றதும் பதான் பத்திரமாக கீழே இறங்கிவிட்டார். ஆனால் தனது புனித நூலான குர்ஆனை ரயிலில் விட்டுவிட்டு வந்ததால் அவர் அதை எடுத்து வர மீண்டும் ரயிலில் ஏறினார்.
தீ வேகமாக எரிகிறது, புகை மண்டலமாக உள்ளது மீண்டும் போக வேண்டாம் என்று சக பயணிகள் தெரிவித்தும் அவர் குர்ஆனை எடுக்க தனது பெட்டிக்கு சென்றார். குர்ஆனை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அவர் பலியானார். பதான் தீயில் சிக்கியதை பார்த்த அவரது சகோதரர் பிரோஸ் கான் அவரை காப்பாற்ற ரயிலில் ஏறி அவரும் பலியானார்.












Click it and Unblock the Notifications