பீமா கோரேகான் யுத்த வெற்றியை கொண்டாட எதிர்ப்பு- புனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி!
மகாராஷ்டிராவில் இந்துத்துவா அமைப்புகளின் தாக்குதலில் தலித் ஒருவர் உயிரிழந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
Recommended Video

மும்பை: 200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றம் நிலவுகிறது.
வீர சிவாஜிக்கு பின்னர் மகாராஷ்டிராவை பேஷ்வா பிராமணர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சியில் ஜாதிய ஒடுக்குமுறை மிக மோசமாக கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தலித்துகளாகிய மகர் சமூகத்தின் படையானது, ஆங்கிலேயர்களுடன் இணைந்து பீமா கோரேகான் என்ற இடத்தில் பேஷ்வா பிராமணர் படையுடன் கி.பி.1818-ம் ஆண்டு மிகப் பெரிய யுத்தத்தை நடத்தினர். இந்த யுத்தத்தில் 25,000 பேஷ்வா பிராமணர் படை கொல்லப்பட்டனர். 500 மகர் படையினர் வீரமரணமடைந்தனர்.

ஜனவரி 1-ல் வீரவணக்க நாள்
இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்று திரண்டு வீரவணக்கம் செலுத்துவர்.

இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு
ஆனால் இந்த ஆண்டு, பீமா கோரேகான் வெற்றியை கொண்டாடுவது தேசதுரோகம் என கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தலித்துகள் பீமா கோரேகானில் ஒன்று திரண்டனர்.

தலித் ஒருவர் பலி
இதற்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இந்த வன்முறையில் புனேவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிரா முழுவதும் தலித்துகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மும்பை, அவுரங்கபாத்துக்கும் பரவியது
புனேவில் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடைபெற்றது. மும்பை, அவுரங்கபாத் நகரங்களுக்கும் இந்த போராட்டம் பரவியது. மும்பையில் 40 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் மும்பையில் பள்ளிகள் மூடப்பட்டன. மும்பை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மும்பை நகரில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

நாளை பந்த் நடத்த அழைப்பு
இந்துத்துவா அமைப்பின் வன்முறை குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்த தலித் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இதனிடையே இந்துத்துவா அமைப்பினரின் வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நாளை நடத்த தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. புனே மற்றும் மும்பையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications