மல்லையாவின் சுயரூபத்தை துகிலுரித்த பெண் ஊழியர்களின் கடிதம்
டெல்லி: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள்.
கடந்த 18 மாதங்களாக சம்பளமே தராமல் தன் இஷ்டத்திற்கு தாறுமாறாக வாழ்க்கை நடத்தி வரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டி வரும், கவர்ச்சிப் பெண்களின் படத்தை வைத்து காலண்டர் போட்டு வரும் மல்லையாவின் முகம் இந்தப் பெண்களின் பகிரங்க கடிதத்தால் மேலும் மோசமாக சிதைந்துள்ளது.
நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தப் பெண் ஊழியர்கள் மல்லையாவின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
பகிரங்க கடிதம்:
தாங்கள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை மல்லையாவுக்கே பகிரங்க கடிதம் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் பெண் ஊழியர்கள் கூறியிருப்பதிலிருந்து சில பகுதிகள்:
கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்:
இந்தக் கடிதத்தை எழுதும் கட்டாய நிலைக்கு எங்களைத் தள்ளி விட்டு விட்டீர்கள் மல்லையா. நாங்கள் பல வருடங்களாக உங்களது நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறோம். உலகின் மிகப் பிரபலமான புகழ் பெற்ற விமான நிறுவனமாக கிங்பிஷர் திகழ்ந்தது. ஆனால் இன்று மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் நாங்கள் நிற்கிறோம்.
மனிதாபிமானம் வற்றிவிட்டது:
வர்த்தகத்தில் சிறந்த ஒருவர், கடவுளுக்கு பயந்த ஒருவரின் கீழ் வேலை பார்த்து வந்த நாங்கள், அப்படிப்பட்டவர் இப்படி மனிதாபிமானமே இல்லாதவராக, தொழில் திறன் இல்லாதவராக, சக மனிதர்களை மதிக்கத் தெரியாதவராக மாறிப் போவார் என்று சத்தியமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நம்பிக்கை துரோகம்:
நீங்கள் சரியில்லாதவர் என்று பலரும் சொன்னபோது கூட நாங்கள் அதை நம்பவில்லை. உங்களைத்தான் நம்பினோம். உங்களைப் பற்றியும், உங்களது குழுமத்தைப் பற்றியும் பலரும் சொன்னபோதும் கூட அதை நாங்கள் நம்பவில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம்.
சிதைந்த நம்பிக்கை:
ஆனால் எங்களது நம்பிக்கையை நீங்கள் சிதைத்து விட்டீர்கள் மல்லையா. எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டீர்கள். விமான ஊழியர்களை உங்களது வீட்டு விருந்துகளில் வேலை பார்க்க வைத்தீர்கள். இப்போது உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
கவலையற்ற மல்லையா:
கடந்த 18 மாதமே சம்பளமே இல்லாமல் நாங்கள் இருக்கிறோமே.. நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று ஒரு நாளாவது கவலைப்பட்டிருப்பீர்களா?
ஊழியர்கள் நினைவு இருக்கா?:
எங்களில் பலரது குடும்ப உறுப்பினர்கள் உங்களது நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்களே.. அது உங்களுக்கு நினைவுள்ளதா?
இருட்டில் தள்ளி விட்டீற்கள்:
எங்களை இருட்டில் தள்ளி ஏன் எங்களது வாழ்க்கை, குடும்பத்தை அழித்தீர்கள். ஏன் எங்களுக்கு பொய்யான நம்பிக்கையை அளித்தீர்கள். ஏன் உங்களது நிறுவனத்தை சீரியஸாக நடத்த நீங்கள் ஆர்வம் காட்டவில்லை. எங்களால் புதிய வேலையைத் தேட முடியவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் முன்பும் நீங்கள் குற்றவாளியாக உள்ளீர்கள். ஒரு எம்.பியாகவம் இருப்பதால் நீங்கள் இந்த நாட்டிற்கு பெரும் அவமானத்தைத் தேடிக் கொடுத்து விட்டீர்கள்.
எங்கள் தாய்மையை மதியுங்கள்:
எங்களது குழந்தைகளின் தேவையை ஒரு தாயாக எங்களால் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம். அதை நீங்கள் உணர்வீர்களா. உங்களுக்கும் ஒரு தாய் உண்டு. நீங்கள் செய்வது சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா. ராஜ்யசபா தேர்தலில் நீங்கள் ஜெயித்தபோது மீடியாக்கள் முன்பு ஆசி பெற மட்டும் உங்களது தாயைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். உங்களது தாயாருக்கு நீங்கள் செய்வது தெரிந்தால், நிச்சயம் அவர் உங்களைக் கண்டிப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களை அவர் நல்வழிப்படுத்துவார் என்று நம்புகிறோம்.
ஊதியம் கொடுக்க மறந்து போனவர்:
வங்கிப் பணத்தையும், பிற நிதி நிறுவனங்களின் பணத்தையும் கடன் என்ற பெயரில் பெற்று ஆடம்பரமாக அதை செலவழித்து வருகிறீர்கள். ஆனால் எங்களுக்கு ஊதியத்தை மட்டும் கொடுக்க மறுக்கிறீர்கள். மறந்தும் போய் விட்டீர்கள்.
பெண்களை மதியுங்கள்:
உண்மையிலேயே பெண்களை நீங்கள் மதிப்பவர்தானா. அவர்களை அசிங்கப்படுத்தி, வியாபாரப் பொருளாக்கி, மலிவான கவர்ச்சியான பொருளாக அவர்களைப் பார்த்து அதை வைத்து வியாபாரம்தான் செய்து வருகிறீர்கள். உங்களது சுய நலத்துக்காகவே பெண்களைப் பயன்படுத்துகிறீர்கள். டெல்லி பெண் கற்பழிப்பு சம்பவத்தின்போது அதி விரைவு கோர்ட்டை அமைக்க வேண்டும் என்று ட்வீட் செய்தீர்கள். நாங்கள் எந்த கோர்ட்டுக்குப் போனால் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்பதற்கும் தயவு செய்து நீங்களே ஒரு வழி காட்டுங்கள்.
சித்திரவதை:
உங்களது வீட்டு பார்ட்டிகளுக்கு வரவழைக்கப்பட்ட பல பெண் விமான ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதை நீங்கள் மறுக்கிறீர்கள். உங்களுக்கு சாதகமாக நடக்க முன்வராத பெண்களை சித்திரவதை செய்தீர்கள். அதையும் மறுக்கிறீர்கள். அது உண்மையாக இருந்தால் மீடியா முன்பு வந்து மறுத்து கூறுங்கள் பார்க்கலாம்.
டுவிட்டரில் செய்தி:
ஐபிஎல் குறித்தும், சஹாரா போர்ஸ் இந்தியா குறித்தும், ஹை பிளிட்ஸ் குறித்தும் டிவிட்டரில் செய்தி தந்து கொண்டே உள்ளீர்கள். ஆனால் உங்களது நிறுவன ஊழியர்கள் குறித்து ஒரு முறையாவது கவலைப்பட்டு டிவிட் அனுப்பியிருப்பீர்களா..
அசையாத மனம்:
உங்களது நிறுவன ஊழியர் ஒறுவரின் மனைவி தற்கொலை செய்தபோது கூட உங்களது மனம் அசையவில்லையே. சம்பளம் இல்லாத சோகத்தில் அந்தப் பெண் உயிரை மாய்த்துதக் கொண்டது கூட உங்களை அசைக்கவில்லையே. இதுகுறித்து டெல்லி போலீஸ் கூட கவலைப்படவில்லையே. ஏன் நீங்கள் அவர்களை விலைக்கு வாங்கி விட்டீர்களா...
மகளிர் தினமாவது ஞாபகம் இருக்கட்டும்:
ஒட்டுமொத்த உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடப் போகிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் கொண்டாட்டம் இல்லை. இந்த நாளில் நாங்கள் எப்படி சித்திரவதைப்பட்டோம், கொடுமையான சூழலில் உள்ளோம் என்பதை சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.ஆனால் உங்களது ஆடம்பரமான, கவர்ச்சிகரமான வாழ்க்கை, படோடபம் ஆகியவை தொடர்கிறது.
ஈகோவை விடுங்கள் மல்லையா:
மிஸ்டர் மல்லையா, உங்களுக்கு வெட்கம், மானம் ஏதாவது இருந்தால் எங்களை வந்து பாருங்கள், எங்களது வாழ்க்கையின் அவலத்தை நேரில் வந்து பாருங்கள். நிச்சயம் எங்களது நிலை உங்களை மனிதாபிமானம் உள்ள மனிதராக மாற்றும்.
நீங்கள் உங்களது ஈகோவை விட்டு விட்டு நிச்சயம் எங்களைப் பற்றியும் நினைப்பீர்கள் என்று இப்போதும் நம்புகிறோம் என்று அப்பெண் ஊழியர்கள் எழுதியுள்ளனர்.