கொல்கத்தாவை அதிரவைத்த Go Back Amit Shah கோஷம்! வானில் கொத்து கொத்தாக பறந்த கறுப்பு பலூன்கள்!
கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் Go Back Amit Shah என்ற முழக்கங்களை எழுப்பியும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பாஜக முனைப்புடன் இருக்கிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சி.ஏ.ஏ.வை ஆதரித்து ஷாகித் மினாரில் 1 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியிலும் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அமித்ஷா ரத்த கறை
அமித்ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவோம் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் எம்டி சலிம் கூறுகையில், அமித்ஷாவை கறுப்பு கொடிகளுடன் வரவேற்க கொல்கத்தா தயாராக உள்ளது. டெல்லி வன்முறைகளில் பாய்ந்தோடிய ரத்த கறை அமித்ஷாவின் கரங்களில் உள்ளது.
அமித்ஷாவை திரும்பிப் போ
அவரை மேற்கு வங்கம் ஒருபோதும் வரவேற்காது. அமித்ஷாவே திரும்பிப் போ (Go Back Amit Shah) என்கிற இயக்கம் மேற்கு வங்கம் முழுவதும் இன்று நடத்தப்படும் என்றார். இதேபோல் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், தரம்தலா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் பிரமாண்டமான அமித்ஷா எதிர்ப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்றார். ஆனால் இதுவரையில் எந்த ஒரு கட்சியும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என்கிறது கொல்கத்தா போலீஸ்.
மாநில அமைச்சர் தலைமையில் போராட்டம்
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதிகாரப்பூர்வமாக அமித்ஷாவுக்கு எதிரான போராட்டத்தை அறிவிக்கவில்லை. ஆனால் மமதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஜாமியாத் உலாமா இ ஹிந்த் தலைவரான அமைச்சர் சித்திக்குல்லா சவுத்ரி, அமித்ஷாவே! பதவி விலகு என்ற முழக்கத்துடன் அமைதிப் பேரணியை நடத்துவதாக அறிவித்துள்ளார். சமூக ஆர்வலரான ரஹ்மானி, கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்.
கொல்கத்தா விமான நிலையம்
இதனிடையே கொல்கத்தா விமான நிலையம் அருகே Go Back Amit Shah என்ற பதாகைகளை ஏந்தியபடி இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கொல்கத்தா நகரம் பதற்றத்தில் இருக்கிறது.