'ஊழல் செய்து தலைமறைவான நபருக்கு உதவுவதா.. பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!'
டெல்லி: பெரும் ஊழல் புகார்கள் மற்றும் முறைகேடுகளில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பயண ஆவணங்கள் பெறுவதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியது மிகப் பெரிய வெட்கக் கேடு. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறைகேடு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபரான லலித் மோடி, வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, 2010-ஆம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், போர்ச்சுகலில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவியைப் பார்க்கச் செல்வதற்காக, அவருக்கு விசா வழங்க உதவுமாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்.பி. கெய்த் வாஸ், அந்நாட்டுத் தூதர் ஜேம்ஸ் பீவன் ஆகியோரிடம் சுஷ்மா பேசியுள்ளார்.
இந்நிலையில், ஊழல் கறை படிந்த நபருக்கு நுழைவு இசைவு வழங்குவதற்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் திவாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஊழல் கறை படிந்தவரான லலித் மோடிக்கு மத்திய அரசு உதவியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் ஊழலை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் பாஜகவின் இரட்டை வேடத்தை இது காட்டுகிறது.
இதற்கு சுஷ்மா மட்டுமன்றி, மத்திய அரசும் கூட்டாகப் பொறுப்பாகும். சுஷ்மா உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்துக்கு அரசும் பொறுப்பு என்பதால், நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.எல்.பூனியா கூறுகையில், "லலித் மோடி தனக்குச் செய்த ஆதாயத்துக்குப் பிரதிபலனாகவே அவருக்கு சுஷ்மா உதவியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா கூறுவது போலியானது,'' என்றார்.
இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "அரசின் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில், லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் அளிப்பது தொடர்பாக பிரிட்டன் அரசுக்கு எழுதப்பட்ட கடிதங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்," என்று கோரியுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் எதிர்க் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ளது.












Click it and Unblock the Notifications