கிரிமினல் எம்பிக்களை பாதுகாக்கும் அவசர சட்டம் முட்டாள்தனமானது- கிழித்து எறியுங்கள்: ராகுல்
டெல்லி: கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் முட்டாள்தனமானது அதை கிழித்து குப்பையில் எறியுங்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.
ஜனாதிபதி ஊசலாட்டம்
இந்த அவசர சட்டத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு கொடுத்தது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களிடம் ஜனாதிபதி விளக்கம் கோரியிருந்தார். அத்துடன் இந்த அவசர சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் என்றும் கூறப்பட்டது.
திடீர் பிரஸ் கிளப் விஜயம்
இந்த நிலையில் டெல்லியில் திடீரென பிரஸ் கிளப்புக்கு அஜய் மக்கானுடன் வந்தார் ராகுல் காந்தி. அத்துடன் இல்லாமல், நீண்ட நேரமாக பிரஸ் மீட் எல்லாம் நடத்தப் போவது இல்லை. நான் என்ன சொல்ல வந்தேனோ அதை சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கப் போகிறேன் என்று தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார்.
முட்டாள்தனமானது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் முட்டாள்தனமானது.
கிழித்து குப்பையில் எறியுங்கள்
கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் இந்த சட்டத்தை கிழித்து குப்பையில் எறிய வேண்டும்.
சமரசம் கூடாது
ஊழலை ஒழிக்க விரும்பினால் அரசியல் கட்சிகள் இதுபோல் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று கடுமையாக மத்திய அரசைத் தாக்கி கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸின் கருத்தும் இதுவே
ராகுலின் எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அஜய் மக்கான், ராகுல் காந்தி, காங்கிரஸின் துணைத் தலைவர். அதனால் அவர் கருத்துதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றார்.
அரசியல் நாடகம்- பாஜக
ஆனால் பாரதிய ஜனதா கட்சி இதை ஒரு அரசியல் நாடகம் என்று விமர்சித்துள்ளது. எப்படியும் ஜனாதிபதி, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டார் என்ற நிலையில் தன்னால்தான் ஒப்புதல் தரவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கவே ராகுல் இப்படி பேசியிருக்கிறார் என்று பாஜக கூறியுள்ளது.