பெங்களூரில் இயக்கப்படும் பிற மாநில வாகனங்கள் மீது இனி போலீஸ் கெடுபிடி குறையும்
பெங்களூர்: பிற மாநில வாகனங்களை ஒரு மாதத்திற்கு மேல் கர்நாடகாவில் இயக்கினால் இம்மாநிலத்தில் ஆயுட்கால வரி செலுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இனிமேல் பழையபடி அதிகபட்சம் ஓராண்டுவரை ஆயுட்கால வரியை கர்நாடக அரசுக்கு செலுத்தாமலே வாகனங்களை இயக்க முடியும்.
பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பல நகரங்களுக்கும் தொழில் மற்றும் பணி நிமித்தமாக தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். சிலர் குறுகிய காலத்திற்கு அங்கேயே தங்குகிறார்கள்.

இதுபோன்றோர் தங்கள் சொந்த மாநிலங்களில் இருந்து தங்களின் பைக் அல்லது கார்களை கொண்டுவந்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், 30 நாட்களுக்கு மேல் பிற மாநில வாகனங்கள் இயக்கப்பட்டால், ஆயுட்கால வரியை கர்நாடக போக்குவரத்து துறையிடம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. சட்டத்தில் திருத்தமும் கொண்டுவந்தது.
இதுகுறித்து ஹைகோர்ட்டில் நடைபெற்ற பொது நல வழக்கில், கர்நாடக அரசின் உத்தரவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே பழைபடி இனிமேல் அதிகபட்சம் ஓராண்டுவரை கர்நாடகாவில் ஆயுட்கால வரி செலுத்தாமல் பிற மாநில வாகனங்களை இயக்கிக்கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது.
இது பெங்களூர் நகரத்தில் தங்கி பணியாற்றும் தமிழக சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பல துறை பணியாளர்களுக்கு பலனளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications