நம்முடையது அடிமை வரலாறு அல்ல.. அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலறவிட்ட வரலாறு.. குஜராத்தில் மோடி பேச்சு
குவாஹாட்டி: "காலம் காலமாக இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்ற வரலாறு நம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது; உண்மையில் நம்முடைய வரலாறு அடிமை வரலாறு அல்ல.. அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலறியடித்து ஓட வைத்த வரலாறு தான் நம்முடையது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்தோம் என்று சொல்லி சொல்லியே நமது பல தலைமுறைகள் தாழ்வு மனப்பான்மையில் துவண்டு விட்டன என்று கூறிய மோடி, இந்த வரலாறை பாஜக திருத்தி எழுதி வருவதாக கூறினார்.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த அஹோம் அரசாட்சியின் போர்ப்படை தளபதி லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

விலகாத அடிமை மோகம்..
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற்று 72 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களாக நம்மிடத்தில் அடிமை மோகம் இருந்தததை யாராலும் மறுக்க முடியாது. வெள்ளைக்காரர்களிடமும், வெள்ளைத் தோல் கொண்டவர்களிடமும் பயபக்தியாக நடந்துகொள்ளும் பழக்கம் நம்மை விட்டு செல்லவில்லை. இது ஏன் என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும், நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு அத்தகையது என்று.

திருப்பி அடிப்பதே இந்தியாவின் வரலாறு..
சுதந்திரம் அடைந்த பிறகும், நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு என்ன? நாம் ஆங்கிலேயர்களிடத்தில் அடிமையாக இருந்த வரலாறுதான் நமக்கு காலம் காலமாக சொல்லித் தரப்பட்டிருக்கிறது. இந்த வரலாறை படித்து படித்து பல தலைமுறைகள் தாழ்வு மனப்பான்மையில் துவண்டு கிடக்கின்றன. ஆனால் நமது உண்மையான வரலாறு என்னவென்று தெரியுமா? வீரமும், எதிர்ப்பும் தான் இந்தியர்களின் வரலாறு. ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். உண்மைதான். ஆனால், அவர்களை நிம்மதியாக நாம் ஆட்சி செய்யவிடவில்லை. அவர்களுக்கு அடிபணிய மறுத்தோம். திருப்பி அடித்தோம். இந்தியர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல்தான் அவர்கள் ஓடினர். ஆனால் இந்த வரலாறு இருட்டிக்கப்பட்டது.

முகலாயர்களை விரட்டியது வரலாறு இல்லையா?
நம்மை அடிமைப்படுத்த முகலாயர்களின் கதி என்னவானது? எத்தனை முகலாயர்கள் நம் வாளுக்கு இரையாகி இருக்கிறார்கள். இது நமது வரலாறு இல்லையா? முகலாயர்களுக்கு எதிராக போரிட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிர்த் தியாகம் செய்தார்களே.. அது வரலாறு இல்லையா? உண்மையான இந்திய வரலாறு எப்படி இருந்திருக்க வேண்டும். நம்மை அடிமைப்படுத்தியவர்களின் சதி குறித்தும், அவர்களை நாம் புறமுதுகிட்டு ஓட வைத்ததையும் தான் வரலாறாக நமக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை.

வரலாறை திருத்தி எழுதுகிறது..
நமது மாவீரர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. நமது வீர வரலாறுகள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். இதை தான் பாஜக தற்போது செய்து கொண்டிருக்கிறது. எதிர்கால சந்ததியினர் நாம் அடிமைப்பட்டு கிடந்தோம் என படிக்கக் கூடாது. அடிமைப்படுத்தியவர்களை எவ்வாறு அலறியடித்து ஓட வைத்தோம் என்றுதான் படிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications