திருச்சானூர் பிரம்மோற்சவம்: கஜ வாகனத்தில் பவனி வந்த பத்மாவதி தாயார்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழாவை ஒட்டி 5ம் நாளன்று கஜ வாகனத்தில் வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
4வது நாளான திங்கள் இரவு அனுமந்த வாகன உற்சவம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

பல்லக்கில் அம்மன்
ஐந்தாவது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவத்தில் பத்மாவதி தாயார் மாடவீதியில் பவனி வந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

வசந்த உற்சவம்
பிற்பகல் 3 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தியை திருச்சானூர் வீதிகளில் கொண்டு சென்றபோது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை தெளித்துக் கொண்டு வசந்த உற்சவத்தை கொண்டாடினர்.

கஜவாகனத்தில் அம்மன்
இரவில் கஜ வாகனத்தில் வந்த உற்சவமூர்த்திக்கு திருப்பதி கோயில் மூலவரின் காசு மாலை அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து, லட்சுமிதேவி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருடவாகனத்தில்
இன்று காலை சர்வபூபால வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும், இரவு கருட வாகனத்திலும் பத்மாவதி தாயார் வீதி உலா வருகிறார். ஏராளமான பக்தர்கள் திருச்சானூர் வருவதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications