சீனா தந்த தைரியம்.. எல்லையில் வேலையை காட்டிய பாக்.. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தாக்குதல்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய எல்லையை சுற்றி இருக்கும் பாகிஸ்தான், நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதனால் லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. அடுத்து எல்லையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் என்ன செய்தது
இந்த நிலையில் சீனா ஒரு பக்கம் இப்படி இந்தியாவை சீண்டி வருகிறது. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான் இன்னொரு பக்கம் எல்லை மீற தொடங்கி உள்ளது. நேற்று நடு இரவில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எல்லை மீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை வரை தாக்குதல் நடந்தது.
சிறு சிறு தாக்குதல்
விடாமல் சிறு சிறு தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்த்தி உள்ளது. முக்கியமாக இன்று அதிகாலை நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ படையின் இருப்புகளை நோக்கி துப்பாக்கி மூலம் ராணுவம் சுட்டது. பாகிஸ்தான் கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
சேதம் இல்லை
ஆனால் இந்த தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்திய வீரர்கள் யாரும் இதில் காயம் அடையவில்லை. இந்தியா உடனடியாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியது. அங்கு உடனடியாக படைகளை குவித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. கடந்த 15ம் தேதியில் இருந்து பூன்ச் மற்றும் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக அத்துமீறி வருகிறது.
எங்கு நடந்தது
அங்கு ஷாபூர் -கெர்னி பகுதியில் தொடங்கிய துப்பாக்கி சூட்டில் கடந்த 14ம் தேதி இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தது. லடாக் எல்லையில் சீனா கொடுத்த தைரியத்தால் பாகிஸ்தான் இப்படி ஆடுவதாக கூறுகிறார்கள். இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுகள் தற்போது எல்லையில் இந்தியாவை நெருக்க தொடங்கி உள்ளது. நேபாளம் இந்தியாவிற்கு எதிராக மேப் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் இடங்களை தனக்கு சொந்தமென்று கூறி நேபாளம் மேப் வெளியிட்டுள்ளது .