பாகிஸ்தானின் எல்லைப்பகுதி வர்த்தகத்துக்கு தற்காலிகமாக இந்தியா தடை
டெல்லி: பாகிஸ்தானின் எல்லைப்பகுதி வர்த்தகத்துக்கு தற்காலிகமாக இந்தியா தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பாரமுல்லா எல்லைப் பகுதியில் கடந்த 17ந் தேதி நடத்தப்பட்ட வாகன சோதனையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷிமீரில் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்படது. பாதாம் கொட்டைகளுக்கு இடையே 114 பாக்கெட்டுகளில் இந்த போதைப் பொருள் கடத்திவரப்பட்டது.
இதனையடுத்து, அந்த வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் எல்லைப்பகுதி வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்தியா முடிவுசெய்துள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்குபின்னால் உள்ளூர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் . போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய மேலும் பலர் சிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவிகின்றனர்.
இந்திய லாரிகள் சிறைபிடிப்பு
இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த போலீசார், ஸ்ரீநகர் பகுதியிலிருந்து, அங்கு சென்ற, 20 இந்திய லாரிகளையும், டிரைவர்களையும் பிடித்து வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட, தங்கள் பகுதி டிரைவரை விடுவித்தால் தான், பிடித்து வைத்துள்ள லாரிகளை விடுவிப்போம் என, அவர்கள் மிரட்டி வருகின்றனர். இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.