நானும் ரவுடிதான்.. மியான்மர் பயத்தை மறைக்க, வான்டடாக வந்து வாலாட்டும் பாகிஸ்தான்!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு மண்டலத்துக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்துள்ள சவ்ஜியான் பகுதியில் இன்று காலை 9.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதலை தொடங்கியது. சிறிய மற்றும் தானியங்கி ரக ஆயுதங்களால் இந்த தாக்குதல் நடந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் கையாண்ட அதே ரக ஆயுதங்களால் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இவ்வாறு இரு தரப்புக்கும் இடையே நீடித்த இந்த சண்டை சுமார் 10 நிமிட நேரம் நீடித்தது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் இருபுறமும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இது மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைவிடுப்பதாக அமைந்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசும்போது "மியான்மர் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் தோரணை மாறிவிட்டது" என்று கூறியிருந்தார்.
அதேநேரம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரோ, நாங்கள் ஒன்றும் மியான்மர் இல்லை, பாகிஸ்தான். எங்களிடம் இதெல்லாம் நடக்காது என்று இந்தியாவுக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
எனவே பாகிஸ்தான், தான் பயப்படவில்லை என்று காண்பிப்பதற்காக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதலை நிறுத்தியிருந்த நிலையில் இன்று இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.