பூன்ச், ஜம்மு பகுதிகளில் பாக். மீண்டும் தாக்குதல்... 24 மணி நேரத்தில் 2 முறை அத்துமீறல்
ஜம்மு: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
போர் ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
காஷ்மீர் பிரச்சினை விசயத்தில் அமைதி வழியில் தீர்வு காண விரும்புவதாகக் கூறினாலும், தொடர்ந்து இந்தியா மீதான தாக்குதல்களை தொடரத்தான் செய்கிறது பாகிஸ்தான்.
அந்தவகையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே ஆர்.எஸ்.புரா என்ற இடத்தில் உள்ள இந்திய எல்லைப்பாதுகாப்புபடை முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பதிலடி தரும் விதமாக இந்திய வீரர்களும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதன்பிறகு பாகிஸ்தான் படைகள் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், பூன்ச் மாவட்டம் அருகே எல்லைப் பகுதியில் காலை 8.30 மணி அளவில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு தாக்குதல் சம்பவங்களால் எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கடந்த 10 நாட்களில், எல்லையில் பாகிஸ்தானின் 10-வது அத்துமீறல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை அத்துமீறியுள்ளது பாகிஸ்தான்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மஜீத் மேமன் கூறுகையில், நட்பை விரும்புகிறதா இல்லையா என்பதை பாகிஸ்தான் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.