மக்களுக்காக வாழ்கிறது பாஜக.. விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை வீணடிக்கவில்லை.. குஜராத்தில் மோடி பேச்சு
அகமதாபாத்: பொதுமக்களின் பணத்தை வீணடிக்காமல் எந்தவித ஆரவாரமும் இன்றி நலத்திட்டங்களை செய்து முடித்துள்ளோம் என்றும், நாங்கள் எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம் என்றும் குஜராத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். குஜராத்தின் பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் விளம்பரத்துக்காக பாஜக அரசு மக்கள் பணத்தை வீணடிக்கவில்லை என்று பேசினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சமூகத்திற்காக வாழ்பவர்கள் பாஜகவினர்
நலத்திட்டங்களை எந்தவித ஆரவாரமும் இன்றி, விளம்பரத்துக்காக பொதுமக்கள் பணத்தை வீணடிக்காமல் அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து முடித்துள்ளோம். எங்களை பொருத்தவரை அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை என்பது மட்டுமே ஆகும். சவுராஷ்டிரா நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்த திட்டம் தேர்தலை மனதில் வைத்து ஒருகட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. இவை அனைத்தும் தவறு என்று நான் நிரூபித்திருக்கிறேன். நாங்கள் எப்போதுமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம். சமூகத்திற்கு வாழ்பவர்கள் நாங்கள் (பாஜக).

சூரத் நகரம் ஒரு மினி இந்தியா
முன்னதாக சூரத் நகரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறுகையில், ''நான் இங்கு முதல்வராக இருந்த போது அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் இங்கு விமான நிலையம் ஏன் அவசியம் என்று சொல்லி சொல்லி சோர்வடைந்து விட்டோம். தற்போது சூரத் வளர்ச்சிக்கு விமான நிலையம் முக்கிய பங்காற்றுகிறது. இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கத்தின் பலன் இதுதான். சூரத் நகரம் ஒரு மினி இந்தியா.. ஏனெனில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இங்கு வசிக்கிறார்கள்'' என்றார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல்
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக உள்ள குஜராத்தில் இந்த முறை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் புது உற்சாகத்துடன் குஜராத் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

முக்கியத்துவம் பெற்றுள்ளது
இதற்காக கடந்த சில வாரங்களாகவே அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த சூழலில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்று இருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications