500, 1000 விவகாரம்: லோக்சபாவுக்குள் முழக்கம்... கட்டிடத்திலிருந்து குதிக்க முயன்றவரால் பரபரப்பு!
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து லோக்சபா கட்டிடத்தில் குதிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு நடவடிக்கைக்கு எதிராக லோக்சபா கட்டிடத்தில் இருந்து குதிக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது; புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் என்ற மத்திய அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் நாடு முழுவதும் மக்களை விரக்திக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2 வார காலமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளுமே இந்த விவகாரத்தால் முடங்கிப் போயுள்ளன. ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி வரவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 28-ந் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் இன்று லோக்சபாவில் பார்வையாளர் ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது, ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் லோக்சபா கட்டிடத்தில் இருந்தும் அவர் கீழே குதிக்க முயன்றார். அவரை பாதுகாவலர்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications