பீகாரில் மதுவிலக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
பாட்னா: பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பூரண மதுவிலக்கை எதிர்த்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சென்ற ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொள்கையை அமல் படுத்துவோம் என்று கூறினார்.
அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற அவர் படிப்படியாக மதுவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 தேதி முதல் மாநிலத்தில் மது நிறுத்தப்படும் என்று சொல்லியிருந்தார். அதன்படி கடந்த 1ம் தேதி முதல் பாதியளவு மதுவிலக்கை அறிவித்தார் முதல்வர் நிதிஷ்குமார்.
ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் சிறிய மற்றும் பெரிய நகரங்களில் விற்பதற்கான அனுமதி மட்டும் நீடித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார்
இது தொடர்பாக ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் , பூரண மதுவிலக்கிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் இனி ஹோட்டல்கள், உள்ளிட்ட எந்த இடங்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பார் லைசென்ஸ்களும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ.என்.சிங் நேற்று பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஒரு மனிதன் என்ன சாப்பிட வேண்டும், என்ன குடிக்கவேண்டும் என உத்தரவிடும் அரசின் முடிவு, மனித உரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.