131 பேரை பலி கொண்ட உ.பி. ஹத்ராஸ் சம்பவம்- சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 131 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 131 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் போலோ பாபா என்ற சாமியாரின் பிரசங்க நிகழ்ச்சிக்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டிருந்தனர். இந்த பிரசங்க நிகழ்ச்சி முடிந்த பின்னர் போலோ பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிய கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என தற்போது வரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது இந்த துயர சம்பவம். அத்துடன் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கூட வைக்க இடமில்லாமல் மருத்துவமனை முன்பாக சாலைகளில் வைத்திருக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லாததால் பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஹத்ராஸ் உயிரிழப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
ஹத்ராஸ் நகரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையை அறிவித்தார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
மேலும் தப்பி ஓடிய போலோ பாபா சாமியாரை உத்தரப்பிரதேச போலீசார் வலை வீசி தேடி வருவதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் போலோ பாபா சாமியாரை உ.பி.யில் ஆளும் பாஜக அரசு பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கவுரவ் துவேதி இந்தப் பொதுநலன் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications