"தீபாவளிக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து சங்கடப்படுத்தாதீர்கள்"... ஆம் ஆத்மி அதிரடி!
டெல்லி: தீபாவளி பண்டிகையை ஒட்டி கட்சியினர் பரிசுப் பொருட்கள் கொடுத்து சங்கடப்படுத்த வேண்டாம் என ஆம் ஆத்மி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், தீபாவளிக்கு பரிசு பொருட்கள் கொடுத்து தங்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று ஆம் ஆத்மி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் இவ்வாறு குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
"தீபாவளிக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து சங்கப்படுத்தாதீர்கள். கடவுள் சிலைகள் உள்ளிட்ட எதுவுமே வேண்டாம்."
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் ஊழலை குறைக்கும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என சமர்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர்களின் இந்த அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.