ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம்... மோடி அறிவிப்பைத் தொடர்ந்து மாஜி ராணுவத்தினர் உண்ணாவிரதம் வாபஸ்
டெல்லி: விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தின் பலன் கிடைக்கும் என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் ராணுவத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி டெல்லி ஜந்தர்மந்திரில் கடந்த 88 நாட்களாக முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பலரின் உடல்நலம் பாதிக்கப் பட்டது. ஆனபோதும், போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்து வந்தனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இந்தப் போராட்டம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெளியிட்டார்.
ஆனால், தங்களின் கோரிக்கைகள் பலவற்றை அரசு நிராகரித்து விட்டதாகக் கூறி முன்னாள் ராணுவத்தினர் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் விவகாரத்தில் அரசின் அறிவிப்பை வைத்து சிலர் முன்னாள் ராணுவத்தினரை தவறாக வழிநடத்துகின்றனர். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தின் பலன் கிடைக்கும்" என அறிவித்தார்.
மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் போராட்ட குழுவின் பிரதிநிதி சத்பிர் சிங் தெரிவித்துள்ளார். ஆனபோதும், பிரதமர் அளித்த வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாக அளித்தால்தான் நாங்கள் முழு அளவில் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications