மதுரா கூட்டத்தில் பென்ஷன் பற்றி அறிவிக்காத மோடி: அதிருப்தியில் முன்னாள் ராணுவ வீர்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மதுராவில் நடந்த மத்திய அரசின் ஓராண்டு நிறைவு கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் நிறைவடைந்ததையொட்டி டெல்லி அருகே உள்ள மதுராவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம்(ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மோடியோ அந்த திட்டம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் முன்னாள் ராணுவ வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்தவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்தது.
அந்த திட்டத்தை ஏப்ரல் மாதம் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்தபோதிலும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஓய் பெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர் கூறுகையில்,
ஓய்வூதிய திட்டம் குறித்து இன்று கூட அறிவிக்கப்படலாம். அந்த திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது என்று அமைச்சர் மனோகர் பாரிகர் எங்களிடம் தெரிவித்தார் என்றார்.