ராசாவை அமைச்சரவையில் சேர்க்க மறுத்த மன்மோகன் சிங்: சோனியா நெருக்கடிக்கு பணிந்தார்!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உத்தரவிடும் அதிகார மையமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செயல்பட்டதாக பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பணிந்தால், பிரதமர் பதவியை விட்டு விலகுவேன் என்று மன்மோகன் சிங் எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2004 முதல் 2008ம் ஆண்டு வரை பணியாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக சஞ்சய பாரு,. "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்: தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆஃப் மன்மோகன் சிங்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நிதி அமைச்சர் நியமனம்
2009ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய திறமை என பிரதமர் மன்மோகன்சிங் கற்பனையில் இருந்தார். அந்த கற்பனையில் புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் அமர்த்த விரும்பினார். அதனடிப்படையில் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜனை நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்திருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா, என்னிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் தனது விருப்பம் போல் பிரணாப் முகர்ஜியை நியமித்தார்.
அணுசக்தி ஒப்பந்தம்
"இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தனது சொந்தக் கட்சி (காங்கிரஸ்) மூலம் முன்னெடுத்துச் செல்வது கடினம் என்று மன்மோகன் சிங் கருதினார். அப்போது, அவர் சோனியாவுடன் இந்த விவகாரம் குறித்து 2008ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி மாலையில் பேசினார். இந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பணிந்தால், பிரதமர் பதவியை விட்டு விலகுவேன் என்று அவர், சோனியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
ஊடகங்கள் பரபரப்பு
அடுத்த நாள் காலையில், பிரதமர் வீட்டுக்கு நேரில் வந்த அப்போதைய மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அன்று பல்வேறு முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை பிரதமர் ரத்து செய்தார். இதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்யப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்தன.
சோனியாவிடம் பேசிய பிரதமர்
அப்போது என்னை (சஞ்சய பாரு) அழைத்த அவர், ஊடகங்களிடம் எதையும் கூறக் கூடாது என்று என்னிடம் தெரிவித்தார். அதன் பின் என்னை மீண்டும் அழைத்த பிரதமர், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சோனியாவிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டதாக தெரிவித்தார்.
பதவியில் தொடர்ந்த பிரதமர்
அந்த நேரத்தில், பிரதமரைப் பதவி விலகாமல் இருக்க அவரைச் சமாதானப்படுத்துமாறு மாண்டேக் சிங் அலுவாலியாவை சோனியா கேட்டுக் கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதன் பின், அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசுக்கு காங்கிரஸின் அனுமதி கிடைத்தது. பிரதமரும் பதவியில் தொடர்ந்தார் என்று தனது புத்தகத்தில் சஞ்சய பாரு தெரிவித்துள்ளார்.
இரு அதிகார மையம்
இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கட்சி தலைவர் தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் அரசு, கட்சிக்கு பதில் அளிக்க வேண்டியது நிர்பந்தம் உள்ளது என பிரதமர் என்னிடம் கூறியதாகவும் அந்த புத்தகத்தில் பாரு கூறியுள்ளார்.
ராசாவுக்கு எதிர்ப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவருவதற்கு முன்பே ராசாவை அமைச்சர் பதவியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலையில் இருந்ததாகவும். பின்னர் 24 மணி நேரத்தில் கட்சிக்காக அடிபணிந்து விட்டதாகவும் பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்கு மாறாக தகவல்
இந்நிலையில், "சஞ்சய பாரு தாம் எழுதிய புத்தகத்தின் விற்பனைக்காக, தாம் ஏற்கெனவே வகித்து வந்த உயர்ந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார். பிரதமரின் மதிப்பை காங்கிரஸ் குலைத்ததாக உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கிறார்' என்று பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரட்டை அதிகார பீடங்கள்
""மத்தியில் இரட்டை அதிகார பீடங்கள் இருப்பது குறித்து நான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்தேன். அதை இப்போது சஞ்சய பாருவின் புத்தகம் நிரூபித்துவிட்டது'' என்று பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications