இனி மத்திய உள்துறை செயலரின் மேற்பார்வையில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும்!
மத்திய உள்துறை செயலரின் மேற்பார்வையில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
டெல்லி : இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டு இருந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் இனி மத்திய உள்துறை செயலரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழக - கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் போடி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. மலையை 4,500 அடிக்கும் மேலாகக் குடைந்து அமைக்கும் இந்த ஆய்வகத் திட்டத்தால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்று மக்களும், அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்தத் திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றச் சொல்லி மக்கள் போராடி வந்த நிலையில் , ஆய்வகம் அமைக்கத் தேவையான வசதிகளும், குறிப்பிட்ட ரக பாறைகளும் தமிழகத்தில் மட்டுமே இருப்பதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும் வேறு மாநிலத்திற்கு மாற்ற வழி இல்லாததால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
தற்போது இந்தத் திட்டத்தை மீண்டும் துவக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்காக மத்திய உள்துறை செயலகத்தின் செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் இந்தப் பணி நடக்கவுள்ளது. 2010 ஆண்டு காங்கிரஸ் அரசால் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், 2015ம் ஆண்டு இதைச் செயல்படுத்த மோடி அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன் நடந்த அணுசக்தி கழகக் கூட்டத்தில் இது குறித்து பேசிய மோடி, திட்டத்தின் வரைவுப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு இதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டரை வருடங்களுக்கு மேலாக இந்தத் திட்டத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அணுசக்தி கழக அதிகாரிகளிடம் பேசிய மோடி, இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தவும், ஆய்வுத் திட்டத்திற்கு வேறு பெயர் வைக்கச் சொல்லியும் பரிந்துரைத்துள்ளதாகவும், இனி இதை மேற்பார்வை செய்ய மத்திய அரசின் உள்துறைச் செயலரை நியமித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆய்வுத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அதுவரை இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது. தற்போது பிரதமரின் இந்த உத்தரவால், மீண்டும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் குறித்த பிரச்னை தமிழகத்தில் சூடு பிடிக்க உள்ளது.