2 நாடு... 7 நாள் பயணம்.. அயர்லாந்து சென்றார் மோடி... அடுத்து அமெரிக்காவைக் கலக்குகிறார்!
டெல்லி: அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசு முறை பயணமாகும் பிரதமர் மோடி, இன்று அயர்லாந்து சென்றடைந்தார். 60 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அயர்லாந்து செல்வது இதுவே முதன் முறை.
பிரதமர் மோடி தனது 7 நாள் அரசு முறை பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். முதலாவதாக அவர் அயர்லாந்து சென்றுள்ளார். அயர்லாந்தின் டுப்ளின் சென்றடைந்த மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 60 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அயர்லாந்து செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பயணம்...
பின்னர், அயர்லாந்தில் இருந்து புறப்படும் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். அங்கு நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. சபைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்க இருக்கிறார்.
பேச்சுவார்த்தை...
இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ராணுவ வர்த்தக தொழில் நுட்ப முயற்சி, அணு சக்தி ஒப்பந்த முன்னேற்றம், எரிசக்தி, உலகளாவிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செயல் அதிகாரிகள்...
பிரதமர் மோடி, நியூயார்க்கில் தங்கி இருக்கும்போது அங்குள்ள வால்ட்ரப் ஆஸ்டாரியா ஓட்டலில் அமெரிக்காவின் 50 முன்னணி தலைமை செயல் அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். இது இரவு விருந்துடன்கூடிய சந்திப்பு ஆகும்.
இந்திரா நூயி...
இந்த நிகழ்ச்சியின் போது போர்டு கார் நிறுவன தலைவர் மார்க் பீல்ட்ஸ், பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைவர் மெரிலின் ஏ ஹியூசன், ஐ.பி.எம். நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜின்னி ரோமெட்டி உள்ளிட்டோர் மோடியைச் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.
சிலிக்கான்வேலி பயணம்...
ஐ.நா. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சிலிக்கான்வேலிக்கு செல்கிறார் மோடி. இதன் மூலம் சிலிக்கான் வேலி செல்கிற முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை இதன் மூலம் அவர் பெறுகிறார்.
பிரமாண்ட வரவேற்பு...
சிலிக்கான் வேலியில் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். அப்போது அவர்கள் மத்தியில் மோடி பேச இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 17 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்.
புகை வெளியேறாத கார்கள்...
பின்னர், கலிபோர்னியாவில் டெஸ்லா கார் நிறுவனத்துக்கு செல்லும் மோடி, அங்கு புகை வெளியேறாத கார்கள் உற்பத்தியைப் பார்வையிடுகிறார். தூய்மை இந்தியா திட்டத்துக்கான தொழில் நுட்பத்தை கண்டறிவதற்கு, இந்த வாய்ப்பை மோடி பயன்படுத்திக்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
பேஸ்புக் அலுவலகம்...
அதனைத் தொடர்ந்து 26ம் தேதி பேஸ்புக் தலைமை அலுவலகம் செல்கிறார் மோடி. அங்கு நடக்கிற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ‘பேஸ் புக்' சமூக வலைத்தள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் செய்து வருகிறார்.
கூகுள் இணையதளம்...
பின்னர், கூகுள் இணையதளத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரையன் லாரி பேஜ், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் முஸ்க் ஆகியோரையும் மோடி சந்திக்க இருக்கிறார்.
இந்திய தொழிலதிபர்கள் குழு...
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில், அவருடன் இந்திய தொழில் அதிபர்கள் குழுவும் செல்கிறது.