உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முத்தலாக்கில் இருந்து முஸ்லீம் பெண்களை காப்பாற்றியது பாஜக.. ஹிஜாப் சர்ச்சைகளுக்கிடையே.. மோடி பேச்சு
தலைவர்கள் தீவிர பிரசாரம்
உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரம் ஓய உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் டெல்லியில் வசித்தாலும் என் மனதில் இருப்பது எல்லாம் உத்தரகாண்ட் மக்கள்தான் என்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500க்கும் குறைவாக கிடைக்கும் என பிரசாரம் செய்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உத்தரகாண்ட் மாநிலத்தை சர்வதேச ஆன்மீக தலமாக மாற்றுவோம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி.
மோடி இன்று பிரசாரம்
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: மத்திய பட்ஜெட்டில் பர்வத்மாலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலைப்பகுதிகளுக்கு சாலைவசதிகள் செய்து தரப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தின் சாலைகள் நவீனமயமாக்கப்படும். எல்லைகளில் உள்ள உத்தரகாண்ட் மாநில கிராமங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயனடையும்.
மீண்டும் பாஜக ஆட்சி
இது உத்தரகாண்ட் மாநிலத்துக்கான யுகம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மார்ச் 10-ந் தேதிக்கு பின் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் அமையும். உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாத்துறையை நாங்கள் மேலும் மேம்படுத்துவோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? அல்லது இடம்பெயரச் செய்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? என்பதை வாக்காளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
பாஜகவுக்கு மக்கள் ஓட்டு
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நேற்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பாஜக நிச்சயம் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெல்லும். வாக்காளர்கள் பாஜகவை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை திட்டம் செயல்படுத்தப்படும். மானஸ்கண்ட் சுற்றுலா சர்கியூர் மேம்படுத்தப்படும்.