'பொருளாதார வளர்ச்சி' மையமாக 'அமராவதி' திகழும்: அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி
அமராவதி: ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாகும் 'அமராவதி' பொருளாதார வளர்ச்சி மையமாக திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அத்துடன் தலைநகராக இருந்த ஹைதராபாத் தற்போது இரு மாநிலங்களுக்கும் பொதுதலைநகராவும் பின்னர் தெலுங்கானாவின் தலைநகராகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆந்திராவுக்கான புதிய தலைநகரம் குண்டூர்மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் தென்பகுதியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இப்புதிய நகருக்கு அமராவதி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நகரம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.
இந்த அமராவதி நகருக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி புதிய தலைநகருக்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார்.
மொத்தம் 36,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைநகரம் உருவாகிறது. புனிதத் தலங்களில் இருந்து நீர் மற்று மண் கொண்டுவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
அமராவதி நகரம், மக்களின் தலைநகரமாக திகழும். நாட்டின் பிற நகரங்களை அமைப்பதற்கு முன்னோடி நகரமாக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதி நவீன வசதிகளுடன் சுற்றுச் சூழலை காக்கும் நகராக அமராவதி உருவாக வேண்டும். நகர்ப்புற மேம்பாடு என்பதை சவாலாக பார்க்காமல் ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அமராவதி நகரம் வெற்றிகரமான ஒரு ஸ்மார்ட் சிட்டியாக நிச்சச்யம் உருவாகும். ஆந்திரா, தெலுங்கானா இரண்டுக்குமா ஆத்மா என்பது தெலுங்குதான்.
மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு அவசரகோலத்தில் தெலுங்கானாவை பிரித்தது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே மோதலை காங்கிரஸ் அரசு உருவாக்கிவிட்டது.
நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்த போதும் புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் ரத்தகளறி எதுவும் நிகழாமல் அந்த பிரிவினைகள் அமைந்தன.
அனைத்து வேறுபாடுகளையும் மறந்து தெலுங்கானா முதல்வரையும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சந்திரபாபு நாயுடு அழைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆந்திராவும் தெலுங்கானாவும் இணைந்து வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். உருவாகும் புதிய நகரமான அமராவதி நாட்டின் பொருளாதார வளர்ச்சி மையமாக திகழும்.
ஆந்திராவுக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும். ஆந்திரா மறுசீரமைப்பு சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டபடி அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிறைவேற்றும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, 25,000 விவசாயிகள் தங்களது 33,000 ஏக்கர் நிலத்தை இந்த அமராவதி நகருக்காக அளித்துள்ளனர். ஒட்டுமொத்த 5 கோடி ஆந்திரா மக்களும் அந்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரோசையா, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.