நேரு மாநாடு: மோடியை தவிர்த்த காங்... ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் ஜெ., மமதாவிற்கு அழைப்பு!
டெல்லி: காங்கிரஸ் கட்சி நடத்தும் நேரு மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மறைந்த ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் மாநாடு அரசியலாகியுள்ளது. ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, மத்திய அரசு ஒருபுறமும், காங்கிரஸ் கட்சி தனியாகவும் ஏற்பாடு செய்து வரும் விழாக்களே இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் மாநாடு
இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துகிறது.
மோடிக்கு அழைப்பு இல்லை
இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிய காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்ற தகவலை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் காங்கிரஸ் மேலிடம் அழைப்பிதழ் அனுப்பவில்லை. அதேசமயம் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அந்த கட்சி, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளது.
அரசியலாகும் நேரு பிறந்தநாள்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. அதற்கு, நேருவின் பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.
மமதா, நிதீஷ் குமார்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்பி உள்ளார்.
ஜெயலலிதா, முலாயம்சிங்
இதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் சோனியா காந்தியே தனது கைப்பட கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.
சரத்பவாருக்கு அழைப்பு
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அமைய தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், அதன் தலைவர் சரத் பவாருக்கும் சோனியா காந்தி கடிதம் எழுதி நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
புறக்கணிப்பு ஏன்?
ஆளும் பாஜக அரசு சமீபகாலமாக நேரு குடும்பத்தை புறக்கணித்து வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபாயின் பிறந்தநாளை கொண்டாடிய மோடி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை மோடி புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம். இதனையடுத்தே பாஜகவை தவிர்த்து பிற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.