'முதல்வர்' மோடி நிறைவேற்றிய சட்டத்திற்கு அனுமதி மறுத்த பிரதமர் மோடி
காந்திநகர்: குஜராத் முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்தபோது அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு, விளக்கம் கேட்டு குஜராத் அரசுக்கே திருப்பியனுப்பியுள்ளது தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு.
2011ம் ஆண்டில், குஜராத் முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்தபோது 'குஜராத் நில குத்தகை மற்றும் விவசாய நிலம் சட்டம் (திருத்தம்) 2011' சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. விவசாய நிலங்களில் வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என்பதால், கல்வி, சுகாதார திட்டங்களுக்காக விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அப்போதைய ஆளுநர் கமலா பெனிவால் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டார். பரிசீலனைக்காக குடியரசு தலைவருக்காக அந்த சட்ட மசோதாவை ஆளுநர் அனுப்பி வைத்தார். அந்த மசோதாவிற்கு குடியரசு தலைவரும் அங்கீகாரம் அளிக்கவில்லை.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் அந்த மசோதா நீர்த்துப்போய் இருந்தது. இந்நிலையில் தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. எனவே, லோக்ஆயுக்தா ஆயோக் போன்ற குஜராத்தின் சரச்சைக்குறிய சட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதேபோல விவசாய நில சட்டத்திற்கும் ஒப்புதல் கிடைக்கும் என்று காத்திருந்த குஜராத் அரசுக்கு அதிர்ச்சி.
ஏனெனில், சட்டம் குறித்த பல்வேறு வகையான விளக்கங்களை கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் அரசுக்கே சட்டத்தை திருப்பியனுப்பியுள்ளது. நரேந்திரமோடி தலைமையிலான மாநில அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தை, அவரது தலைமையிலான மத்திய அரசே திருப்பியனுப்பியுள்ளதுதான் முரண்பாட்டின் உச்சம்.












Click it and Unblock the Notifications