எனக்கு போய் கோவில் கட்டுவதா?: அதிர்ச்சியில் மோடி
டெல்லி: குஜராத்தில் தனக்கு கோவில் கட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பாஜக ஆதரவாளர்கள் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டியுள்ளனர். அந்த கோவிலில் மோடியின் மார்பளவு சிலையை வைத்துள்ளனர். கோவில் திறப்பு விழா வரும் 15ம் தேதி சிறப்பாக நடக்க உள்ளது.
இந்நிலையில் இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் பெயரில் கோவில் கட்டியுள்ள செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. இது போன்ற கோவில் கட்ட நம் கலாச்சாரம் நமக்கு கற்றுத் தரவில்லை. இந்த கோவில் விவகாரத்தால் கவலை அடைந்துள்ளேன். இதை செய்தவர்களை இது போன்று செய்யாதீர்கள் என்று வலியுறுத்துகிறேன்.
உங்களுக்கு நேரமும், பணமும் இருந்தால் அதை சுத்தமான இந்தியா கனவை நிறைவேற்ற தயவு செய்து பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவிலை கட்டிய ஓம் யுவா அமைப்பின் தலைவர் ஷங்கர் பட்டேல் கூறுகையில்,
கடந்த 11 ஆண்டுகளாக மோடியின் புகைப்படத்தை வைத்து வணங்கி வந்தோம். தற்போது புகைப்படத்திற்கு பதில் சிலையை வைத்துள்ளோம். வரும் 15ம் தேதி திறப்பு விழா நடத்துகிறோம். அன்றைய தினம் பலருக்கு திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications