தேர்தல் வந்துருச்சு..பீகாருக்கு ரூ13,480 கோடி திட்டங்கள்- புதிய ரயில் சேவைகள்-தொடங்கி வைக்கும் மோடி!
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகள் அணிக்கும் இடையே உக்கிரமான மோதல்தான் பீகார் தேர்தல் களம்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 24) பயணம் மேற்கொள்கிறார் . பீகாரில் நாளை காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவில் ரூ.340 கோடி மதிப்பிலான சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது சமையல் எரிவாயுவின் விநியோகத்தை சீரமைக்கவும், மொத்த சமையல் எரிவாயு விநியோகத்திற்கான திறனை மேம்படுத்துவதற்கும் உதவிடும். மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ .1,170 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சஹர்சா - மும்பை இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சேவையையும், ஜெயநகர் - பாட்னா இடையேயான நமோ பாரத் விரைவு ரயில் சேவையையும், பிப்ரா- சஹர்சா, சஹர்சா - சமஸ்திபூர் இடையேயான ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சுபால் பிப்ரா ரயில் பாதை, ஹசன்பூர் பிதான் ரயில் பாதை, சாப்ரா, பகாஹா ஆகிய இடங்களில் இரண்டு இருவழி ரயில் மேம்பாலங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். ககாரியா-அலாலி ரயில் பாதையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதியின் கீழ் சுமார் 930 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
மேலும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 15 லட்சம் புதிய பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களை பிரதமர் வழங்குகிறார். நாடு முழுவதிலும் இத்திட்டத்தின் கீழ், 10 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான தவணைத் தொகையையும் விடுவிக்கிறார். பீகாரில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 1 லட்சம் வீடுகளுக்கும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 54,000 வீடுகளுக்கும் குடியேறுவதற்கான வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications