குஜராத்தில் வாக்குப்பதிவு தீவிரம்... இளைஞர்கள் வாக்களிக்க பிரதமர் டுவீட்!
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் இளைஞர்கள் அதிக அளவில் தங்களது வாக்குகளை பதிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி : தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இரண்டாவது கட்டமாக வடக்கு மற்றும் தெற்கு குஜராத்தில் 93 இடங்களுக்கு டிசம்பர் 14ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படுகின்றன.
குஜராத்தில் காங்கிரஸ், பாஜகவிற்கு நேரடி போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி குஜராத் தேர்தலை வளர்ச்சிக்கும் குடும்ப சக்திக்கும் எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கும் குஜராத் தேர்தல் பலப்பரிட்சையாகவே பார்க்கப்படுகிறது.
பாஜகவிற்கே வெற்றி என கருத்துக்கணிப்பு
சட்டசபை தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு நடத்திய மூன்று சர்வேகள் குஜராத்தில் மீண்டும் பாஜகவே வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. ஆனால் கடந்த முறையை விட குறைவாக மார்ஜின் வித்தியாசத்திலேயே இந்த வெற்றி இருக்கும் என்றும் கணித்துள்ளன.
சவுராஷ்டிரா தொகுதி வாக்குப்பதிவு
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதியப்படும் வாக்குகளே எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்பதை தீர்மானிக்கும். அரபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள சவுராஷ்டிரா தொகுதி 11 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
2012ல் எவ்வளவு இடங்கள்?
சவுராஷ்டிரா, கட்சில் மொத்தமுள்ள 58 இடங்களில் 2012ம் ஆண்டில் பாஜக 35 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 20 இடங்களையும் வென்றிருந்தது. இதே போன்று தெற்கு குஜராத்தில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய 35 இடங்களில் பாஜக 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களையும் கடந்த முறை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
|
பிரதமர் டுவிட்டரில் கருத்து
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் குறித்து ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதில் குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று வாக்களிக்கும் அனைவரும் தவறாமல் தங்களது கடமையை செய்து வாக்குப்பதிவில் வரலாறு படைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் முன்வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.