ஆடம்பர மாற்றங்களில்லை... ரேஸ்கோர்ஸ் சாலை பிரதமர் பங்களாவில் குடியேறினார் மோடி!
டெல்லி: ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 7ம் எண் கொண்ட பங்களாவில் இன்று குடியேறினார் பிரதமர் மோடி. ஆனால், அதற்கு முன்னதாக அந்த வீட்டில் அவர் எந்த மாறுதலும் செய்யச் சொல்லவில்லை என மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்தவாரம் பிரதமர் பங்களாவைக் காலி செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு புதிய வர்ணம் பூசப்பட்டது. மேலும், திரைச்சீலைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டும் தேவைக்குத் தக்க சுத்தம் செய்யப் பட்டது. மற்றபடி புதிதாக எதுவும் பொருட்கள் வாங்கப்பட வில்லை என பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமையல்காரர் உட்பட தனிப்பட்ட குழு ஒன்றுடன் பிரதமர் பங்களாவில் குடியேறியுள்ளார் பிரதமர் மோடி.

முதல் பிரதமர்...
ரேஸ் கோர்ஸ் சாலை யில் உள்ள 7ம் எண் கொண்ட பங்களாவில் குடியேறிய முதல் பிரதமர் ராஜீவ் காந்தி ஆவார். அதில் இருந்து அந்த பங்களா பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றப்பட்டது.

5 பங்களாக்கள்...
சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள 7 ரேஸ்கோர்ஸ் சாலை பங்களா தொகுப்பில் மொத்தம் ஐந்து பங்களாக்கள் உள்ளன. அவற்றின் எண் முறையே 1,3, 5, 7 மற்றும் 9 ஆகும்.

விருந்தினர் மாளிகை...
இதில் 3ம் எண் கொண்ட வீட்டில் வசித்து வந்த மன்மோகன் சிங், தற்போது மோடி குடியேறியுள்ள வீட்டை விருந்தினர் மாளிகையாக பயன் படுத்தி வந்தார்.

வாஜ்பாய் காலத்தில்...
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பங்களாக்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டார்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை...
பொதுவாக பதவியில் அமர்ந்ததும் அரசு ஒதுக்கும் புதிய வீட்டில் குடியேறும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமக்கு தக்கப்படி அவ்வீட்டை மாற்றிக் கொள்வது வழக்கம். வாசலை அப்படி மாத்து, இதைத் தூக்கி அங்கு வை.. இந்தக் கலர் வேணாம்.. அந்தக் கலர் பூசு.. புதிதாக இதை வை என்று ஏகப்பட்ட தடபுடல் அமர்க்களங்களை அரசுப் பணத்தில் தாம் தூம் என்று செய்வார்கள். ஆனால், புதிய பிரதமர் அவ்வாறு ஏதும் மாறுதல்களைச் செய்யச் சொல்லாதது ஆச்சர்யம் அளிப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எளிமையை விரும்பும் மோடி...
தனித்து வாழும் பிரதமர் மோடி பொதுவாகவே எளிமையை விரும்பக் கூடியவர். எனவே, அது கூட மாறுதல்கள் எதுவும் செய்யச் சொல்லாததற்குக் காரணமாக இருக்கலாம் என சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பிரதமர் விரும்பினால் அவருக்கு தேவையான மாறுதல்களைச் செய்து தர தாங்கள் தயாராக உள்ளதாக அவர்கள் உறுதி பட கூறுகின்றனர்.

மயில், கொக்கு ஓவியங்கள்...
இயற்கையை பெரிதும் விரும்பும் மோடியின் குஜராத் வீட்டின் காம்பவுண்ட் சுவர்களில் விதவிதமான பறவைகள் ஓவியம் வரையப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications